சொத்துக்காக சித்தியை கொல்ல முயற்சித்த மகள், மருமகன் கைது
சொத்துக்காக சித்தியை கொல்ல முயற்சித்த மகள், மருமகன் கைது
ADDED : மார் 30, 2024 02:48 AM

யஷ்வந்த்பூர்: சொத்துக்காக சித்தியை கொல்ல முயற்சித்த சகோதரி மகள், மருமகனை போலீசார் கைது செய்தனர்.
யஷ்வந்தபூரில் வசித்து வருபவர் அன்னம்மா, 56. இவரது கணவர், 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதனால்தான் பணியாற்றி சம்பாதித்த பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று மாடி வீட்டை வாங்கினார். இதன் மூலம் மாதம் 30,000 ரூபாய் அன்னம்மாவுக்கு வாடகை கிடைத்து வருகிறது.
தனக்குச் சொந்தமான வீட்டில் தன் மூத்த சகோதரியின் மகள் சுமித்ரா, மருமகன் முனிராஜு ஆகியோரை குடியமர்த்தியுள்ளார்.
முனிராஜு, லாரி ஓட்டுனர். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அன்னம்மாவுக்கு மாதந்தோறும் 30,000 ரூபாய் வாடகை வருவதை, தம்பதி அறிந்தனர். சித்தியிடம் பணம், தங்க நகைகள் இருக்கும் என நினைத்தனர். இதை அபகரிக்க இருவரும் திட்டமிட்டனர்.
கடந்த மார்ச் 18ம் தேதி தன் கணவர் இறந்த நாளில் சாமி கும்பிட சுமித்ராவை அன்னம்மா அழைத்துச் சென்றார். ஆர்.எம்.சி., யார்டு அருகே சென்றபோது, ஏற்கனவே திட்ட மிட்டபடி, பின்னால் இருந்து வந்த முனிராஜுடன் சேர்ந்து, அன்னம்மாவை கொலை செய்ய முயன்றனர்.
தவறுதலாக அவரது கையில் கத்தி குத்தியதால், அன்னம்மா கதறினார். இதனால் சுமித்ரா, முனிராஜு ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த அன்னம்மாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
மருத்துவமனையில் அன்னம்மாவிடம் தகவலைப் பெற்ற போலீசார் தம்பதியை தேடி வீட்டுக்கு விரைந்தனர்.
அதற்குள், அன்னம்மா வீட்டில் இருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளுடன் தலைமறைவாகினர். தீவிர விசாரணையில் அவர்கள் தர்மஸ்தலாவுக்கு பஸ்சில் தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், மைசூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மைசூரு அருகே பஸ்சை வழிமறித்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், அன்னம்மாவை கொல்ல முயற்சித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

