காணாமல் போன 18 நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து அகற்ற முடிவு
காணாமல் போன 18 நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து அகற்ற முடிவு
ADDED : மார் 26, 2024 12:55 AM
புதுடில்லி, காணாமல் போனதாக இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள 18 நினைவு சின்னங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.
நம் நாட்டின் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில், நாடு முழுதும் 3,693 நினைவு சின்னங்களை, தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டில், நாடு முழுதும் இந்த நினைவு சின்னங்கள் தொடர்பாக கள ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, 92 நினைவு சின்னங்கள் காணவில்லை என்று பட்டியலிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிர கள ஆய்வுகள் நடத்தப்பட்டதில், 42 நினைவு சின்னங்கள் மீட்கப்பட்டன.
அதே நேரத்தில், 50 நினைவு சின்னங்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. நகரமயமாக்கல், அணைகள் கட்டுவது போன்றவற்றால் இவை காணாமல் போனதாக கூறப்பட்டது.
கலாசாரத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு கடந்தாண்டு தாக்கல் செய்த அறிக்கையில், காணாமல் போன 50 நினைவு சின்னங்களில், 24 சின்னங்கள் கண்டுபிடிக்க முடியாதவை என்று பட்டியலிடப்பட்டன.
இந்த 24 சின்னங்களில், தற்போது 18 சின்னங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தொல்லியல் துறை இணையதளத்தில், பொதுமக்களின் கருத்து கோரப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் சட்டத்தின்படி, அடுத்த வாரத்தில் இவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.
இவற்றில், 11 நினைவு சின்னங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவை. டில்லி மற்றும் ஹரியானாவில் தலா இரண்டு அடங்கள் இடம் பெற்றுள்ளன. அசாம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசத்தில் தலா ஒரு நினைவு சின்னமும், பட்டியலில் இருந்து அகற்றப்படும்.
இதைத் தொடர்ந்து, அந்த நினைவு சின்னங்கள், தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து நீக்கப்படும். மேலும், அவை இருந்ததாகக் கூறப்படும் இடத்தைச் சுற்றி மேம்பாட்டு நடவடிக்கைக்கான தடை நீக்கப்படும்.

