டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...கைது!:'ராஜினாமா இல்லை' என அறிவிப்பு
டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...கைது!:'ராஜினாமா இல்லை' என அறிவிப்பு
UPDATED : மார் 22, 2024 01:05 AM
ADDED : மார் 22, 2024 01:03 AM

புதுடில்லி:டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கொள்கையை வகுத்தது.
இதில், பல தனியார் மதுபான அதிபர்கள் பலன் அடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
எட்டு முறை சம்மன்
விசாரணை நடத்திய சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அக்கட்சியை சேர்ந்த விஜய் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தது.
அதைத் தொடர்ந்து புதிய மதுபானக் கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், தன் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும், 'சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது, ஏப்., 22ல் விசாரணை நடத்தப்படும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு வந்த சில மணி நேரங்களில், டில்லியில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி ஒன்பதாவது முறையாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
144 தடை
பின்னர், வீட்டை சோதனையிட தங்களிடம் வாரன்ட் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் வீட்டைச் சுற்றி, முன்னெச்சரிக்கையாக அதிரடிப் படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அவரது வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், கெஜ்ரிவாலின் மடிக்கணினியில் இருந்து பல்வேறு, 'டிஜிட்டல்' ஆதாரங்களை பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வேளையில், கைது நடவடிக்கை கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி, பதிவாளருக்கு முதல்வர் எழுதிய கடிதம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
போராட்டம்
இதற்கிடையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக, டில்லி முழுதும் தகவல் பரவியது. ஆம் ஆத்மி தொண்டர்கள் அவர் வீட்டின் அருகே குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
சோதனையின் முடிவில், கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
''கைது செய்யப்பட்டாலும், டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்,'' என, அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததை ரத்து செய்யக் கோரி நாங்கள்
உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இன்றிரவே (நேற்று) உச்ச நீதிமன்றத்தில்
அவசர விசாரணைக்கு நாங்கள் கேட்டுள்ளோம். எங்கள் வழக்கறிஞர் குழு, அவசர
விசாரணைக்காக உச்ச நீதிமன்றப் பதிவாளரின் இல்லத்திற்குச் செல்கிறது.
ஆதிஷி, மாநில அமைச்சர்

