ADDED : மார் 13, 2025 01:25 AM

ஈஷா யோக மையம் மற்றும் ஜக்கி வாசுதேவ் தொடர்பான, 'யு டியூப் வீடியோ' காட்சியை நீக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிரபல, 'யு டியூபர்' ஷியாம் மீரா சிங் என்பவர், 'ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் என்ன நடக்கிறது?' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு எதிராக ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா யோக மையம் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் அமைப்பு பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை உள்நோக்கத்துடன் பொய்யாக பரப்புவதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது
இந்த வழக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா யோக மையம் தொடர்பாக குறிப்பிட்ட நபர் பதிவேற்றம் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையோ வீடியோவையோ வெளியிட தடை விதிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களான, 'எக்ஸ், பேஸ்புக், யு டியூப், கூகுள்' ஆகியவையும் இந்த வீடியோக்களை உடனடியாக தங்கள் தளங்களிலிருந்து நீக்க உத்தரவிட்டு விசாரணை ஜூலை 9க்கு ஒத்திவைக்கப்பட்டது.
-டில்லி சிறப்பு நிருபர்-