ADDED : ஆக 07, 2024 02:27 AM

நேதாஜி நகர்:கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30,000 கட்டுமானங்களை டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து, 316 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளது.
டில்லியில் கடந்த சில வாரங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை டி.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ராஜ்யசபாவில் ஆம் ஆத்மியின் உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் டோகன் சாஹு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:
புதுடில்லி முனிசிபல் கவுன்சில், டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம், மத்திய பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ், டி.டி.ஏ., எம்.சி.டி., மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2019 முதல் தற்போது வரை மொத்தம் 316.72 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை டி.டி.ஏ., அகற்றியுள்ளது. அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 30,853 கட்டுமானங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2023ம் ஆண்டில் மட்டும் பாதிக்கு மேல் அகற்றப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, இதுவரை மொத்தம் 2,624 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
2019 முதல் தற்போது வரை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் 11,060 குடியிருப்புகள். 23 வணிக அமைப்புகள். மேலும் இதுவரை மொத்தம் 316.72 ஏக்கர் அரசு நிலத்தை டி.டி.ஏ., மீட்டுள்ளது.
இந்த ஏஜென்சிகளிடம் உள்ள தரவுகளின்படி, இந்த நடவடிக்கையால் 20,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 103.27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2,462 குடிசைவாசிகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த பதிலில் இணை அமைச்சர் கூறியுள்ளார்.