ADDED : ஜூலை 03, 2024 05:21 AM

பெங்களூரு: பாலியல் தொல்லை வழக்கில் கைதான, பா.ஜ., பிரமுகர் தேவராஜே கவுடாவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவைச் சேர்ந்தவர் தேவராஜே கவுடா. வக்கீலான இவர் பா.ஜ., பிரமுகர். பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில், 50 நாட்களுக்கு முன்பு தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டு, ஹாசன் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு ஹாசன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதி உமா விசாரித்து வந்தார்.
நேற்றுகாலை நடந்த விசாரணையின்போது, தேவராஜே கவுடாவுக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உமா உத்தரவிட்டார். இதனால் நேற்று மாலை சிறையில் இருந்து, தேவராஜே கவுடா விடுவிக்கப்பட்டார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
நான் சிறையில் இருந்தபோது எனக்காக குரல் கொடுத்த, பா.ஜ., தலைவர்களுக்கு நன்றி. எனது கைது எதிர்பார்த்த ஒன்றுதான். ஒரு குடும்பத்தால் ஹாசன் மாவட்டத்தின் கவுரவம், சர்வதேச அளவில் ஏலம் விடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து பேசுவேன். மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து, ஹாசனில் பிரமாண்ட மாநாடு நடத்துவேன். உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க முயற்சிப்போம். மத்திய அமைச்சர் குமாரசாமி ஹாசனுக்கு வரும்போது, ஹொளேநரசிபுராவில் பெரிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைப்பேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
2.7.2024 / சுப்பிரமணியன்
படம்: தேவராஜே கவுடா