பாலியல் வன்கொடுமை,பெண் கடத்தல் வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
பாலியல் வன்கொடுமை,பெண் கடத்தல் வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
UPDATED : மே 04, 2024 09:32 PM
ADDED : மே 04, 2024 07:25 PM

பெங்களூரு:வேலைக்கார பெண்ணை கடத்தி, அடைத்து வைத்திருந்த வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,வுமான ரேவண்ணாவை, பெங்களூரு சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.
ரேவண்ணா மகன் பிரஜ்வல் 300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும் 3000 ஆபாச வீடியோ வெளியான வழக்கில் கர்நாடக மாநில போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தது. பிரஜ்வல் மற்றும் ரேவண்ணா மீது 3 பெண்கள் பாலியல் புகார் கொடுத்து உள்ளனர். பாலியல் வன்கொடுமை, பெண்ணை கடத்திய வழக்கு போன்றவற்றில் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு இருந்தது.
இதனிடையே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து அவர் கைது செய்யும் நடவடிக்கையில் சிறப்பு போலீசார் இறங்கினர். பெங்களூரு பத்பநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா இல்லத்தில் வைத்து ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
மேலும் ஹாசன் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா வீட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அழைத்து வந்து சிறப்பு புலானய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
ரேவண்ணா கைது ஏன்?
பிரஜ்வல் மீதான பாலியல் வன்கொடுமை ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் பாலியல் புகாருக்கு ஆளான பணிபெண்ணை கடத்தியதாகவும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்ய்பட்டது. கடத்தப்பட்ட பெண்ணின் மகன் தாயை மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்திருந்தார்.
ரேவண்ணாவின் உதவியாளர் வீட்டில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை சிறப்பு புலனாய்வு போலீசார் மீட்டனர்.தொடர்ந்து ரேவண்ணா வீட்டிலும் சிறப்பு புலானய்வு போலீசார் சோதனை நடத்தினர்.
தேவகவுடா வீட்டில் பதுங்கல்
இந்நிலையில் தனது தந்தை தேவகவுடா முன்னாள் பிரதமர் என்பதால் போலீசார் வீட்டிற்கு வரமாட்டார்கள் என நினைத்து அங்கு பதுங்கி இருந்தாகவும், அவரது நடமாட்டத்தை சிறப்பு போலீஸ் குழுவினர் கவனித்து வந்துள்ளனர். அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோதிடத்தில் நம்பிக்கை
ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட ரேவண்ணா தன்னை கைது செய்ய வந்த போலீசாரை காத்திருக்க செய்து விட்டு ஜோதிடரின் ஆலோசனைப்படியே 6.50 மணிக்கு பின்னர் போலீசாருடன் சென்றுள்ளார். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள எஸ்.ஐ.டி. , அலுவலகத்தில் போலீசார் ரேவண்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.