ADDED : மே 09, 2024 09:33 PM

கர்நாடகாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அற்புதமான, புராதனமான கோவில்கள் பல உள்ளன. இத்தகைய கோவில்களில் கலகடகியின் ஹொளயம்மா கோவிலும் ஒன்றாகும்.
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும் மாறுபட்ட, சிறப்பான வழிபாடுகள், உற்சவங்கள், சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. பக்தர்களை தங்கள் வசம் ஈர்க்கின்றன. அதே போன்று ஹொளயம்மா கோவிலும் பக்தர்களுக்கு பிடித்தமான கோவிலாக உள்ளது.
தார்வாட், கலகடகியின் கடியாதா தபகதாவின் ஹொன்னள்ளி கிராமத்தில், ஹொளயம்மா கோவில் உள்ளது. கலகடகி எல்லையில் உள்ள ஓடையில் இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவில் 300 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எந்த காரணத்துக்காகவும், கோவிலில் மின் விளக்குகள் பொருத்த கூடாது. எண்ணெய் விளக்கு ஏற்றி, அதன் ஒளியில் மட்டுமே பூஜை செய்ய வேண்டும். கோவிலின் உட்புறம், கர்ப்பகிரகம் மட்டுமின்றி வெளி வளாகத்திலும் கூட மின் விளக்குகள் பயன்படுத்த கூடாது.
பொதுவாக மற்ற கோவில்களில், திருவிழாக்கள் என்றால் கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வண்ண மயமான மின் விளக்குகளால் அலங்காரம் செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஹொளயம்மா கோவிலில் இத்தகைய அலங்காரங்கள் செய்வதில்லை. எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். சாஸ்திர முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன.
ஹொளயம்மா கோவிலில் குடி கொண்டுள்ள அம்பாளை, தினமும் தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு இல்லை. தீபாவளியின் நரக சதுர்த்தியில் துவங்கி ஐந்து நாட்கள், கோவில் கதவு திறந்திருக்கும். ஐந்து நாட்களும் தீமிதி, துலாபாரம், விரதம், தீர்க்க தண்ட நமஸ்காரம் உட்பட பல்வேறு வழிபாடுகள் நடக்கும். அனைத்தும் முடிந்த பின், கோவில் கதவு மூடப்படும். அதன்பின் கோவில் அடுத்த ஆண்டுதான் திறக்கப்படும்.
தீபாவளி நேரத்தில் கலகடகிக்கு வரும் பக்தர்கள், ஹொளயம்மா கோவிலை தரிசனம் செய்யலாம். சொந்த வாகனத்தில் வரலாம். பஸ் வசதியும் உள்ளது
.- நமது நிருபர் -