ADDED : பிப் 26, 2025 02:15 AM
மூணாறு,:மூணாறு ஊராட்சியில் கட்சி தாவிய உறுப்பினரை கட்சி தாவல் தடை சட்டத்தின்படி தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
மூணாறு ஊராட்சி 17ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த பாலசந்திரன் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் 2023 பிப்ரவரியில் காங்.,ல் இணைந்தார். இதுகுறித்து இடதுசாரி கூட்டணி தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. அதன்படி கட்சி தாவல் தடை சட்டத்தில் பாலசந்திரனை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்தும், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.
இவர் 2023 செப்டம்பர் முதல் ஊராட்சி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். ஏற்கனவே 8ம் வார்டில் இந்திய கம்யூ., சேர்ந்த தங்கமுடி, இடது சாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் 2022 செப்டம்பரில் காங்.,ல் இணைந்தார். அவரையும் தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்தது. தற்போது காங்., வசம் உள்ள ஊராட்சியில் காங்., 11, இடது சாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர்.