டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபீஸ் செல்ல வேண்டாம்
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபீஸ் செல்ல வேண்டாம்
ADDED : மே 23, 2024 01:18 AM
புதுடில்லி,
ஓட்டுனர் உரிமம் எடுக்கும் நடைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த முறை தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓட்டுனர் உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க, குறைந்தது 1 ஏக்கர் நிலம் தேவை. கனரக வாகனங்களுக்கு 2 ஏக்கர் நிலம் தேவை.
பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஐந்து ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், 'பயோமெட்ரிக்' மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்திருத்தல் அவசியம்.
தனியார் பயிற்சி மையங்கள் அரசு அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

