ADDED : ஜூலை 26, 2024 10:30 PM

சண்டிகர்:ஹரியானாவில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, தொழில் முன்னேற்றத் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து, அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அரசு டாக்டர்களுடன் மாநில அரசு பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.
இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுதும் 3,000 டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்கள் மற்றும் ஓய்வுபெற்ற டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், முதல்வரின் முதன்மைச் செயலர் ராஜேஷ் குல்லார் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள், டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று மீண்டும் பேசினர்.
தொழில் முன்னேற்றத் திட்டம், முதுகலை படிப்புக்கான சேர்க்கைக்கு, இரண்டு பத்திரங்களுக்கு பெறபப்டும் தலா 1 கோடி ரூபாய் கட்டணத்தை குறைத்தல், மூத்த மருத்துவ அதிகாரி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பை நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். முதல் கட்ட பேச்சு முடிவில், பத்திரத் தொகையை, ஒரு கோடியில் இருந்து, 50 லட்சம் ரூபாயாக குறைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
டாக்டர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

