காதலன் ஏமாற்றியதாக இளம்பெண் புகார் போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்
காதலன் ஏமாற்றியதாக இளம்பெண் புகார் போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்
ADDED : ஆக 12, 2024 07:14 AM
கெங்கேரி: முதல் கணவரை விவாகரத்து செய்தால், திருமணம் செய்வதாக கூறியதால், போலீசில் பொய் புகார் அளித்துள்ளதாக பெண் மீது வாலிபர் குற்றம் சாட்டி உள்ளார்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் பைரவி, 30. இவருக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவரின் குடிப்பழக்கத்தால் வெறுப்படைந்த பைரவி, கணவரை பிரிந்து, தாய் வீட்டுக்கு சென்றார். மகனை ஹாஸ்டலிலும், மகளை தாய் வீட்டிலும் விட்டுவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு வந்தார்.
பெட்ரோல் பங்க்
கெங்கேரி ஹர்ஷா லே - அவுட்டில் உள்ள தன் தோழிகளுடன் வீடு ஒன்றில் தங்கி, பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். அதே வேளையில், சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்'கள் பதிவிட்டு வந்துள்ளார்.
மாண்டியாவை சேர்ந்த பிரஜ்வல், 28, பெங்களூரில் கேப் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். பைரவியின் ரீல்ஸ்களுக்கு 'லைக்'குகளை வழங்கி வந்தார்.
நாளடைவில் இருவரும் தங்கள் மொபைல் போன் எண்களை பரிமாறி கொண்டனர். அவ்வப்போது பேசி வந்தனர்.
அப்போது தனக்கு இரு குழந்தைகள் இருப்பதாகவும், கணவரின் குடிப்பழக்கத்தால் அவரை விட்டு பிரிந்ததாகவும் கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட பிரஜ்வல், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால், பைரவியின் தோழிகள் வேறு இடத்துக்கு சென்ற பின், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
போலீசில் புகார்
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார், என்று நேற்று கெங்கேரி போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் மீது பைரவி புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், பிரஜ்வலை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது பிரஜ்வல், 'பைரவியை சந்தித்த போது, அவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பதை கூறவில்லை. நானாகத்தான் கண்டுபிடித்தேன்.
'அப்போது, முதல் கணவரை விவாகரத்து செய்து விடு. நான், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். இதனால் கோபமடைந்த அவர், போலீசில் பொய் புகார் அளித்துள்ளார்' என்றார்.
போலீசார் கூறுகையில், 'அப்பெண், தன் முதல் கணவரை விவாகரத்து செய்தால், பைரவியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக இப்போதும் பிரஜ்வல் கூறுகிறார்' என்றனர். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.