ADDED : பிப் 22, 2025 03:09 AM
நாக்பூர் : மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிசுக்கும், சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே நாக்பூரில் நேற்று கூறுகையில், “என்னை எளிதாக யாரும் எண்ண வேண்டாம். 2022ல் என்னை லேசாக நினைத்தவர்களின் அரசைக் கவிழ்த்து, மக்கள் விரும்பிய புதிய அரசை அமைத்தேன். என் தலைமையிலான அரசு முழுவீச்சில் செயல்பட்டது. புரிந்து கொள்வோருக்கு, இந்த தகவலே போதுமானது. நான், என் கடமையை தொடர்ந்து செய்வேன்,” என்றார்.
கடந்த 2022ல், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தபோது, சிவசேனா கட்சியை உடைத்து, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., ஆதரவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
அப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக இருந்தார். இதைத்தான் ஷிண்டே குறிப்பிட்டார்.