விதிகளை மீறாமல் பிரதமர் மோடி, ராகுல் பேச நட்டா, கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் 'அட்வைஸ்'
விதிகளை மீறாமல் பிரதமர் மோடி, ராகுல் பேச நட்டா, கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் 'அட்வைஸ்'
ADDED : மே 15, 2024 12:47 AM

புதுடில்லி, 'மீதமுள்ள மூன்று கட்ட ஓட்டுப்பதிவின் போது, தேசிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பர்' என எதிர்பார்ப்பதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், தங்கள் தேர்தல் பிரசார பேச்சுகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பா.ஜ., மற்றும் காங்., கட்சியினர் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை எங்களிடம் வந்த புகார்களில், 90 சதவீத புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள மூன்று கட்ட ஓட்டுப்பதிவின் போது தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். அவர்களின் பேச்சு மற்றும் அறிக்கைகளின் போக்கை சரி செய்ய வேண்டியது கட்சி தலைவர்களின் முதன்மையான பொறுப்பு. சமூகத்தின் நுட்பமான கட்டமைப்பை சீர்குலைக்கும்படியாக பேச்சு இருக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட, 4,000 பேர் கையெழுத்திட்டு, தேர்தல் கமிஷனில் நேற்று மனு அளித்தனர்.
அதில், 'தேர்தல்களில் பதிவான ஓட்டு சதவீத்தை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் கமிஷன் பின்பற்ற வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இதில், சமூக ஆர்வலரும், நடிகையுமான ஷபானா ஆஸ்மி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

