ADDED : மே 07, 2024 02:35 AM

புதுடில்லி, :லோக்சபா தேர்தலுக்கான மூன்றாம் கட்ட ஓட்டுப் பதிவு இன்று நடக்க உள்ளது. இதில், நாடு முழுதும் உள்ள, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 93 தொகுதிகளில் உள்ள மக்கள் ஹோட்டளிக்க உள்ளனர்.
லோக்சபாவுக்கு, ஏப்., 19ல் துவங்கி, ஜூன், 1ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடக்க உள்ளது.
தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 94 இடங்களுக்கு மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில், ஜம்மு -- காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜோரி தொகுதிக்கு இன்று நடப்பதாக இருந்த தேர்தல், பனிப்பொழிவு காரணமாக, 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் சூரத்தில் பா.ஜ., போட்டியின்றி வென்றது.
மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் உயிரிழந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெதுல் தொகுதிக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இதையடுத்து, குஜராத் உள்பட, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 93 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளில், 25 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
கர்நாடகாவில் உள்ள, 28 இடங்களில், ஏற்கனவே 14 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. மீதமுள்ள, 14 இடங்களுக்கு இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
அசாமில், 14 இடங்களுக்கு முதல் இரண்டு கட்டங்களில், 10 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள, நான்கு இடங்கள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.
அதுபோல சத்தீஸ்கரில் நான்கு தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள, ஏழு தொகுதிகளில் இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
கோவாவில் உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதுபோல, தாத்ரா - நாகர் ஹவேலி, டாமன் - டயூவில் உள்ள, இரண்டு தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
வரும், 13, 20, 25 மற்றும் ஜூன், 1ம் தேதி அடுத்தகட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. ஜூன், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.