செந்தில் பாலாஜி வழக்கின் ஆதாரம் அமலாக்கத் துறைக்கு கோர்ட் கேள்வி
செந்தில் பாலாஜி வழக்கின் ஆதாரம் அமலாக்கத் துறைக்கு கோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 24, 2024 09:06 PM
புதுடில்லி:தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் அவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்த விபரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத் துறை, பண மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கி மோசடி செய்த புகாரின் அடிப்படையில், கடந்தாண்டு ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருடைய ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள், அபய் ஓகா, ஏ.ஜி. மாஷி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே, 13 மாதங்களாகச் சிறையில் இருப்பதால், உடனடியாக ஜாமின் வழங்க வேண்டும் என, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தாவிடம், அமர்வு கூறியுள்ளதாவது:
செந்தில் பாலாஜி, 67 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இதற்கு நேரடி மின்னணு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அந்த ஆவணங்கள் எங்கே; பென்டிரைவில் இருந்து அது எடுக்கப்பட்டதா? ஆனால், அந்த பென்டிரைவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள், தடயவியல் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதா? அந்த ஆவணங்கள் எந்த வடிவில் உள்ளன, எங்கிருந்து பெறப்பட்டது, அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டதா? இந்த ஆவணங்கள் குறித்த அனைத்து தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியது.
இதற்கு அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா அவகாசம் கோரினார். விசாரணை இன்றும் தொடர்கிறது.