முதியவருக்கு கொலை மிரட்டல் பிரபல ரவுடி பச்சா கான் கைது
முதியவருக்கு கொலை மிரட்டல் பிரபல ரவுடி பச்சா கான் கைது
ADDED : செப் 05, 2024 03:51 AM
ஹூப்பள்ளி : ஒரு கோடி ரூபாய் கேட்டு, முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கொலை வழக்கில் பரோலில் வந்த, பிரபல ரவுடி பச்சா கான் கைது செய்யப்பட்டார்.
பழைய ஹூப்பள்ளியை சேர்ந்தவர் பச்சாகான், 45. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2020ல் பழைய ஹூப்பள்ளியில் நடந்த, இர்பான் என்பவர் கொலையில் கைது செய்யப்பட்டு, பல்லாரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
குடும்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, சிறையில் இருந்து 45 நாட்கள் பரோலில், கடந்த மாதம் 3ம் தேதி பச்சாகான் வெளியே வந்தார்.
இந்நிலையில், ஹூப்பள்ளி மண்டூர் ரோட்டில் வசிக்கும், தொழில் அதிபரான 70 வயது முதியவருக்கு, இரண்டு மொபைல் நம்பரில் இருந்து அழைத்து பேசிய பச்சாகான், 'எனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன்னையும், உனது குடும்பத்தினரையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அந்த முதியவர், ஹூப்பள்ளி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
பச்சாகான் இருப்பிடம் பற்றி, ஹூப்பள்ளி சி.சி.பி., போலீசார் விசாரித்த போது, பெங்களூரில் இருப்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற, சி.சி.பி., போலீசார் பச்சாகானை கைது செய்தனர். அவரை ஹூப்பள்ளி அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.