ADDED : பிப் 26, 2025 11:21 PM

சிக்கமகளூரு: மின் துறை அமைச்சர் ஜார்ஜ் பொறுப்பில் உள்ள சிக்கமகளூர் மாவட்டத்தில், விவசாயிக்கு 13 ஆண்டுகளுக்கு பின், 3 லட்சம் ரூபாய் மின் கட்டண பில் வந்துள்ளது.
சிக்கமகளூரின், சிக்கரனே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உமேஷ். இவர் விவசாய பணிகளுக்கு இலவச மின்சாரத்தில், 10 குதிரை திறன் மோட்டார் பயன்படுத்துகிறார். பல ஆண்டுகளாக அவருக்கு இலவச மின்சாரம் கிடைத்து வந்தது.
தற்போது, 'மெஸ்காம்' எனும் மங்களூரு மின் வினியோக நிறுவனம், திடீரென 3 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தும்படி, விவசாயி உமேஷுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. 15 நாட்கள் கெடு விதித்து, அதற்குள் கட்டணம் செலுத்தா விட்டால், மின் இணைப்பை துண்டிப்பதாக எச்சரித்துள்ளனர்.
மாநிலத்தில் பங்காரப்பா முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே, விவசாய பணிகளுக்கு இலவச மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இப்போது திடீரென மின் கட்டணம் செலுத்தும்படி, மெஸ்காம் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சரியல்ல என, உமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.