பலாத்காரம் செய்து சிறுமி கொலை பூங்காவில் சடலத்தை வீசிய தந்தை
பலாத்காரம் செய்து சிறுமி கொலை பூங்காவில் சடலத்தை வீசிய தந்தை
ADDED : பிப் 26, 2025 07:55 PM
மால்வியா நகர்:பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று, சடலத்தை பூங்காவில் வீசிய வழக்கில் தந்தை உட்பட இருவரை குற்றவாளிகள் என, டில்லி நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
கடந்த 2019 பிப்ரவரி 9ம் தேதி மைனர் சிறுமியை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு டி.டி.ஏ., பூங்கா ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. அவளது மர்ம உறுப்பில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதே, அவரது மரணத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.
பூங்காவின் சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சூட்கேஸில் வைத்து சிறுமியின் உடல் எடுத்து வரப்பட்டு, அங்கு வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக சிறுமியை பலாத்காரம் செய்ததாக ராஜேந்தர், 27, என்பவரையும் அவருக்கு உதவியதாக சிறுமியின் தந்தை ராம் சரண், 57, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவர் மீதும் போலீசார் டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி பபிதா புனியா விசாரித்து, 24ம் தேதி இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
மொத்தம் 168 பக்கத் தீர்ப்பில் இந்த வழக்கை அரிதினும் அரிதான குற்றமாக நீதிபதி அறிவித்துள்ளார்.

