மைசூரு சாமுண்டி மலையில் தீ அரிய மூலிகை செடிகள் நாசம்
மைசூரு சாமுண்டி மலையில் தீ அரிய மூலிகை செடிகள் நாசம்
ADDED : பிப் 22, 2025 05:32 AM

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் ஏற்பட்ட தீயில், பல ஏக்கர் வனப்பகுதி, அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.
கோடை வெயில் காரணமாக, மைசூரு உத்தனஹள்ளி வனப்பகுதியில் செடிகள், இலைகள் காய்ந்துள்ளன. நேற்று மதியம் இப்பகுதியில் அடர்ந்த புகை காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியது. இந்த தீ, அருகில் உள்ள சாமுண்டி மலையிலும் பரவியது. மூன்று வாகனங்களில் தீயணைப்பு படையினர் வந்தனர்.
கூடுதலாக இரண்டு குடிநீர் லாரிகளும் அழைத்து வரப்பட்டன. ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின், தீ அணைக்கப்பட்டது. தீயை அணைக்கும் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதில், அரிய வகை மருத்துவ செடிகள் உட்பட சில சிறிய உயிரினங்கள் உயிரிழந்தன.
முதல்கட்ட விசாரணையில், 'மர்ம நபர்கள் சிகரெட் துண்டை அணைக்காமல் வீசி உள்ளனர். காய்ந்த இலைகள், செடிகள் இருந்ததால் தீப்பிடிக்க துவங்கியது. நேற்று காலை வெயிலின் தாக்கத்தாலும், பலத்த காற்று வீசியதாலும், மளமளவென பரவியது' என தெரியவந்துள்ளது.
தீயணைப்பு துறை மைசூரு பிரிவு மண்டல அதிகாரி சந்தன் கூறியதாவது:
எங்களுக்கு மதியம் தான் தகவல் கிடைத்தது. உடனே மூன்று வாகனங்களுடன் அங்கு சென்றோம். மேலும் கூடுதலாக இரண்டு குடிநீர் வாகனங்களை வரவழைத்தோம். தீயை அணைக்கும் முயற்சியில் இரண்டு அதிகாரிகள் தலைமையில் 25 பேர் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்திருப்போம். அந்நேரத்தில் காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென வேறு இடங்களில் பரவியது. இதனால் தாமதமானது.
இவ்வாறு அவர் கூறினார்.