தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நம் நாட்டில் முதன்முறையாக!

நம் நாட்டில் முதன்முறையாக!

நம் நாட்டில் முதன்முறையாக!


UPDATED : மே 16, 2026 07:55 PM

ADDED : மே 16, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2026 07:55 PM ADDED : மே 16, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நம் நாட்டில் முதன்முறையாக, வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த 182 கோடி ரூபாய் மதிப்புள்ள, 228 கிலோ அதிபயங்கர, 'கேப்டகன்' போதைப்பொருள் டில்லி மற்றும் குஜராத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு காரணமான சிரியாவை சேர்ந்த கடத்தல் ஏஜென்ட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

மேற்காசிய நாடுகளுக்கு, இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக என்.சி.பி., எனப்படும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு இம்மாத தொடக்கத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. டில்லியை மையமாக வைத்து இந்த கடத்தல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து, 'ஆப்பரேஷன் ரேஜ்பில்' எனப்படும், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை தலைநகர் முழுதும் என்.சி.பி., அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, டில்லியில் நெப் சராய் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடு ஒன்றில், கடந்த 11ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சப்பாத்தி செய்யும் இயந்திரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 31.5 கிலோ எடையுள்ள, 'கேப்டகன்' எனப்படும், 'ஜிஹாதி போதைப்பொருள்' மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த இயந்திரம், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் தங்கியிருந்த மத்திய கிழக்கு நாடான சிரியாவை சேர்ந்த நபரை என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர், கடந்தாண்டு நவம்பரில் இந்தியா வந்ததும், கடந்த ஜனவரியுடன் அவரின் விசா காலம் முடிவடைந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்பேரில், கடந்த 14ல் குஜராத்தின் முந்த்ராவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்குள்ள கொல்கலன் வசதி நிலையத்தில், கொள்கலன் ஒன்றில், மூன்று பைகளில் மறைத்து வைக்கப்பட்ட 196.2 கிலோ கேப்டகன் தூள் மீட்கப்பட்டது. அந்த கொள்கலன் வாயிலாக சிரியாவில் இருந்து செம்மறி ஆட்டு கம்பளி இறக்குமதி செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட 227.7 கிலோ கேப்டகன் போதைப்பொருளின் மதிப்பு 182 கோடி ரூபாய்.

இந்தியாவில், மிகப்பெரிய அளவிலான கேப்டகன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன்முறை. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேற்காசிய நாடுகளுக்கு, குறிப்பாக ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு வழங்க கடத்தப்பட இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான நபரிடம் விசாரணை நடத்தி வரும் என்.சி.பி., அதிகாரிகள், அதிகளவிலான 'கேப்டகன்' பறிமுதல் செய்யப்பட்டதன் வாயிலாக, சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:

'ஆப்பரேஷன் ரேஜ்பில்' வாயிலாக 'ஜிஹாதி போதைப்பொருள்' என அழைக்கப்படும் 182 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மத்திய புலனாய்வு அமைப்பு முதன்முறையாக பறிமுதல் செய்துள்ளது. நம் நாட்டின் வழியாக வெளியேறும் ஒவ்வொரு கிராம் போதைப்பொருளையும் என்.சி.பி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. நம் நாட்டை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேப்டகன் - ஜிஹாதி போதைப்பொருள் என்றால் என்ன? கேப்டகன் என்பது பெனெட்டிலின் என்ற ஒரு செயற்கை ஊக்க மருந்தின் வர்த்தக பெயர். இது, 1960ம் ஆண்டுகளில் மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில், போதைப்பொருளாக இது பயன்படுத்தப்படுவது தெரிந்ததை அடுத்து, 1980களில் சர்வதேச அளவில் இதற்கு தடை விதிக்கப்பட்டது. பின், ஐ.நா.,வின் மனோவியல் பொருட்கள் மீதான மாநாட்டின் அட்டவணை கீழ் கேப்டகன் சேர்க்கப்பட்டது. மேற்காசிய பகுதியில் பல ஆண்டுகளாக இது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சிரியா உள்நாட்டு போரின் போது, அங்குள்ள ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள், வீரர்கள் சுறுசுறுப்பாக சோர்வின்றி செயல்பட கேப்டகனை பயன்படுத்தினர். சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், பயத்தை குறைக்கவும் இந்த ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, கேப்டகன் 'ஜிஹாதி போதைப்பொருள்' என, முத்திரையிடப்பட்டது. அதிக போதை தருவதால், இது, பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us