ADDED : ஜூன் 22, 2024 12:45 AM
குவஹாத்தி,
அசாமில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி, நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
சேதம்
ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கோபிலி, பராக், குஷியாரா ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.
தொடர் மழையால், 19 மாவட்டங்களை சேர்ந்த நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கரிம்கஞ்ச் பகுதியில் மட்டும் 2.5 லட்சம் பேர் வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.
அடுத்ததாக, தரங் மற்றும் தமுல்பூர் பகுதிகள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. தொடர் கன மழையால் தடுப்பணைகள் நிரம்பியுள்ளன; சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பாலங்கள் இடிந்து சேதமடைந்து உள்ளன.
பஜாலி, பாக் ஷா, பர்பேட்டா, பிஷ்வாநத், கச்சார், தரங், கோல்பாரா, ஹைலகன்டி, ஹோஜய், காமரூப், கரிம்கஞ்ச், கோக்ராஜ்ஹர், லக்கிம்பூர், நாகோன், நல்பாரி, சோனித்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர், உடல்குரி போன்ற 19 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மாநிலத்தின் பல பகுதி களில் அடுத்த இரண்டு நாட்கள், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.
36 பேர் பலி
அசாமில் இந்த ஆண்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி காற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 14,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு, 100க்கும் அதிகமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.