மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுககு...: துாக்கு தண்டனை!
மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுககு...: துாக்கு தண்டனை!
ADDED : செப் 03, 2024 11:43 PM

கோல்கட்டா:பாலியல் குற்ற வழக்குகளில் மரணம் ஏற்பட்டால், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், 'அபராஜிதா' மசோதா எனப்படும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சியான பா.ஜ., - ஆளும் திரிணமுல் காங்., இடையே கடும் வாக்குவாதத்துக்கு மத்தியில், இந்த மசோதாவை நிறைவேற்றினார் முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மாணவர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர், 25 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இரண்டு கடிதம்
பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்த வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மம்தா இரண்டு கடிதங்களை எழுதிஇருந்தார்.
இந்நிலையில், அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மேற்கு வங்க கிரிமினல் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் மசோதாவை, முதல்வர் மம்தா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின்படி, பாலியல் குற்றங்களில் உயிரிழப்பு ஏற்படுத்தினால், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிப்பது, 21 நாட்களுக்குள் போலீஸ் விசாரணையை முடிப்பது, விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, விசாரணைக்காக மாவட்ட அளவில் பணிக் குழுக்கள் உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முன்மாதிரி
மசோதாவை தாக்கல் செய்து மம்தா பானர்ஜி பேசியதாவது:
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதினேன். ஆனால், ஏற்கனவே உள்ள சட்டங்களில் கடுமையான பிரிவுகள் உள்ளதாக கூறிஉள்ளனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று கிரிமினல் சட்டங்களில், பெண்கள் பாதுகாப்புக்கான போதிய அம்சங்கள் இல்லை. இந்த ஓட்டைகளை அடைக்கும் வகையிலேயே, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி, மத்திய சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த மசோதா, சட்டமாகும்போது, அதன் வெற்றி தெரியும். இது நாடு முழுதுக்கும் முன்மாதிரி சட்டமாக இருக்கும்.
விரைவான விசாரணை, மிக வேகமான நீதி விசாரணை, அதிக தண்டனை உள்ளிட்டவையே, இந்த மசோதாவின் நோக்கம்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில், ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும், தண்டனையை அதிகரிக்க வேண்டும் என, மத்திய அரசை கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால்தான், இந்த மசோதா கொண்டு வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்கது
பாலியல் பலாத்காரம் என்பது மனிதகுலத்தின் சாபம். சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் இவற்றை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில், ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.
மாவட்ட அளவில் இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க அபராஜிதா பணிக் குழு அமைப்பது போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
மசோதாவின் பல பிரிவுகளுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும் என்பது உள்பட, பல திருத்தங்களை, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முன் வைத்தார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ஏற்கப்படவில்லை.
கோஷமிட்டனர்
முன்னதாக, சட்டசபைக்கு மம்தா வந்தபோது, கோல்கட்டா ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்துக்கு பொறுப்பேற்று, அவர் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
மசோதா மீதான விவாதத்தின்போது சுவேந்து அதிகாரி பேசியதாவது:
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில், மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்பும் நோக்கத்துடனேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், அதை உண்மையிலேயே இந்த அரசு செயல்படுத்த வேண்டும்.
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்களில், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிகள் நடந்தன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முயற்சிக்காமல், குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியிலேயே திரிணமுல் காங்., அரசு ஈடுபட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.