ADDED : ஏப் 27, 2024 06:06 AM
பெங்களூரு: ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு, ஹோட்டலில் இலவச சிற்றுண்டி வழங்கப்பட்டது. மக்கள் வரிசையில் நின்று, சிற்றுண்டி வாங்கினர்.
பெங்களூரின் நிருபதுங்கா சாலையில் இந்திய ரிசர்வ் வங்கி அருகில், 'நிசர்கா கிராண்ட்' ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் ஒவ்வொரு தேர்தலின்போதும், இலவச உணவு வழங்குவது வழக்கம்.
லோக்சபா தேர்தலின், முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. ஓட்டு போட்டு வந்த வாக்காளர்களுக்கு, இலவச சிற்றுண்டி, குளிர்பானம் வழங்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான வாக்காளர்கள், ஓட்டு போட்ட பின் ஹோட்டலுக்கு வந்தனர். கை விரலில் ஓட்டு போட்டதற்கான அடையாள மையை காண்பித்து, இலவசமாக சிற்றுண்டி பெற்றுக்கொண்டனர்.
ஹோட்டல் உரிமையாளர் கிருஷ்ண ராஜு கூறுகையில், ''ஓட்டு போடுவதை ஊக்கப்படுத்தும் நோக்கில், எங்கள் ஹோட்டலில் இலவச உணவு வழங்கப்படுகிறது, இதில் அரசியல் நோக்கம் இல்லை. வெண்ணெய் தோசை, நெய் லட்டு, குளிர்பானத்தை மக்கள் பெற்றனர்,'' என்றார்.

