ADDED : ஜூன் 28, 2024 11:00 PM
பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், பெண்களை போன்று, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது.
கர்நாடக அரசு, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக, 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தியது. 2023 ஜூன் 11 முதல், போக்குவரத்துக் கழக பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர்.
இந்த திட்டம் பெண்களுக்கு, மிகவும் உதவியாக உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த பின், வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் என, எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினர். ஆனால் எந்த காரணத்தை கொண்டும், வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது என, அரசு உறுதியாக கூறியது.
இதற்கிடையில், பெண்களை போன்று, 60 வயதை தாண்டிய ஆண்களும் இலவசமாக பஸ்களில் பயணிக்க அனுமதி அளிக்க, அரசு ஆலோசிக்கிறது. விரைவில் திட்டம் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'திட்டம் செயல்படுத்தப்பட்டால், வயதான காலத்தில் கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல உதவியாக இருக்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பஸ்களில் பெண்களை இலவசமாக அழைத்து செல்லும், போக்குவரத்துக் கழகங்களுக்கு, மாநில அரசு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
இதனால் மாநிலத்தின் நான்கு போக்குவரத்து கழகங்களும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நிலையில் வயதான ஆண்களுக்கும், இலவச பஸ் பயண திட்டத்தை செயல்படுத்தினால், அரசுக்கு பொருளாதாக சுமை அதிகரிக்கும்.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட, 1.25 லட்சம் பேருக்கு 2023 ஜனவரி 1 முதல், 15 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தனை மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவை தொகையை, இன்னும் வழங்கவில்லை. இதற்காக அரசின் நிதியுதவியை, போக்குவரத்து கழகங்கள் எதிர்பார்க்கின்றன.