மெகா திருமணம், சீர்வரிசை என மோசடி: கடைசி நிமிடத்தில் கம்பி நீட்டிய கும்பல்
மெகா திருமணம், சீர்வரிசை என மோசடி: கடைசி நிமிடத்தில் கம்பி நீட்டிய கும்பல்
ADDED : பிப் 22, 2025 11:54 PM

ராஜ்கோட்: மெகா திருமணம், இலவச சீர்வரிசை எனக் கூறி, திருமண வீட்டாரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து, கடைசி நிமிடத்தில் தலைமறைவான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மெகா திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்து, சுமார் 100 ஜோடிகளுக்கு, பிரமாண்டமாக திருமணம் நடத்தித் தருவதாக ஒரு கும்பல் விளம்பரம் செய்தது.
அதிர்ச்சி
விளம்பரத்தை பார்த்து வந்த ஒவ்வொரு மணமகன், மணமகள் வீட்டாரிடமும் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்ததுடன், சீர்வரிசை பொருட்கள், தங்கம், வரதட்சணை, மணமக்களுக்கு பரிசுகள் தருவதாக அந்த கும்பல் உறுதி அளித்தது.
ராஜ்கோட் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணத்தை கட்டியதுடன், நேற்று திருமணத்துக்காக தங்கள் உறவினர்களையும் அழைத்து வந்தனர்.
திருமண கனவுகளுடன் இளம் மணமக்களும் வந்து சேர்ந்தபோது, விழாவுக்கான ஏற்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை என தெரிந்து, அதிர்ச்சியடைந்தனர்.
விழா ஏற்பாட்டாளர்களின் மொபைல் போன்களுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மெகா திருமண விழா, மெகா குழப்ப விழாவாக மாறியதைப் பார்த்ததும், திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த புரோகிதர்கள் திரும்பிச் சென்றனர்.
நன்றாக ஏமாற்றப்பட்டதை அறிந்த திருமண கோஷ்டியினரில் சிலர், மனதை திடப்படுத்திக்கொண்டு, அருகில் உள்ள கோவில்களில் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டனர்.
விசாரணை
இதற்கிடையே, தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த திருமண வீட்டாரை அமைதிப்படுத்தி விசாரணை நடத்தினர்.
மேலும், போலீசாரின் ஏற்பாட்டில் ஆறு ஜோடிகளுக்கு அந்த இடத்திலேயே திருமணம் நடைபெற்றது.
சிலர், திருமணம் முடிக்காமலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்டையில், மெகா திருமணம் எனக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.