ADDED : மே 30, 2024 09:54 PM

கர்நாடகாவின் வரலாறு பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தன்மை, சிறப்புகள் கொண்டுள்ளன. இதில், மைசூரின் கோதண்டராமர் கோவிலும் ஒன்றாகும்.
மைசூரில் அரண்மனைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், 'அரண்மனை நகர்' என, அழைக்கப்படுகிறது. அரண்மனைகள் மட்டுமின்றி, நகரில் புராதன பிரசித்தி பெற்ற கோவில்களும் அமைந்துள்ளன. காந்தம் போன்று மக்களை ஈர்க்கின்றன.
மைசூரு நகரின், அக்ரஹாராவில் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இது 200 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். பொதுவாக கோவில்களின் கர்ப்பகுடியில், ஒரு கடவுள் விக்ரகத்தை தவிர, வேறு எந்த விக்ரகங்களும் இருக்காது. ஆனால் கோதண்டராமர் கோவிலின் கர்ப்பகுடியில், ராமர், லட்சுமணன், சீதையுடன் ஆஞ்சநேயரும் இருக்கிறார்.
கோவில் தினமும் 8:00 மணி முதல், 10:00 மணி வரை திறந்திருக்கும். தினமும் இந்த கோவிலில், பூஜைகள் நடக்கின்றன. திருமணம் தடைபட்டவர்கள், கோவிலுக்கு வந்து பூஜித்தால், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்யும் போது, சாலிகிராம கல் மூலமாக அபிஷேகம் நடத்தப்படுகிறது.
அபிஷேகம் செய்த நீரை, நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு, பிரசாதமாக கொடுக்கின்றனர். இதை அருந்தினால், நோய் குணமாகும் என்பது, மக்களின் நம்பிக்கையாகும். வேண்டிய வரங்களை அளித்தரும் கடவுள் என்பதால், கோதண்டராமர் கோவிலில் பக்தர்கள் குவிகின்றனர்.
மைசூரு மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் கோதண்டராமர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். திருமணம் தடைபடும் தங்கள் மகன், மகள்களை அழைத்து வருகின்றனர்.
- நமது நிருபர் -