பாதுகாப்பு சாதனம் பயன்படுத்துங்கள் மின் தொழிலாளர்களுக்கு அரசு உத்தரவு
பாதுகாப்பு சாதனம் பயன்படுத்துங்கள் மின் தொழிலாளர்களுக்கு அரசு உத்தரவு
ADDED : மே 26, 2024 06:32 AM
பெங்களூரு: 'மின்சாரம் தொடர்பான பணிகள் நடக்கும்போது, தொழிலாளர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் பழுதுநீக்கும் தொழிலாளர்கள், மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள், பல இடங்களில் நடக்கின்றன.
இதற்கு தொழிலாளர்களின் அலட்சியமே காரணம். கை உறைகள், பூட்ஸ் பயன்படுத்தாமல் பணியில் ஈடுபடுகின்றனர். இதை மனதில் கொண்டு, அவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:
மின் கம்பங்கள், மின் மாற்றிகளை பழுது நீக்கும்போது, தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மின்சாரம் பாயும் கம்பிகளில் இருந்து விலகி இருங்கள். பணியின்போது, சிறந்த தரமான பூட்ஸ், கை உறைகளை மறக்காமல் பயன்படுத்துங்கள்.
பணியில் ஈடுபடும்போது, உலோகப்பொருட்கள் உங்களிடம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மின் கம்பிகள் உள்ள இடங்களில், தண்ணீர் தேங்காமல் உஷாராக இருங்கள்.
இடி, மின்னல் இருக்கும்போது மின்சாரம் தொடர்பான பணிகளை செய்யாதீர்கள். மின்சாரம் தொடர்பான புலமை உள்ளவர்களை மட்டுமே, பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
பணியிடங்களில் அசம்பாவிதங்கள் நடந்தால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.