டில்லி மனநல காப்பகத்தில் 20 நாளில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அரசு உத்தரவு
டில்லி மனநல காப்பகத்தில் 20 நாளில் 14 பேர் மரணம் விசாரணைக்கு அரசு உத்தரவு
ADDED : ஆக 03, 2024 12:44 AM
புதுடில்லி, டில்லியில் உள்ள மனநல காப்பகத்தில் 14 பேர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு, அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
டில்லியில் ரோஹிணி என்ற பகுதியில், ஆஷா கிரண் மனநலக் காப்பகம் அமைந்துள்ளது. டில்லி அரசு நடத்தும் இந்த காப்பகத்தில் கடந்த 20 நாட்களில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து டில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி கூறியதாவது:
அரசு மனநல காப்பகத்தில் ஏற்பட்ட இந்த மரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தவறுகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி காப்பகத்தின் குறைபாடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆஷா கிரண் காப்பகத்தில் முழு விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் தங்கியிருப்போருக்கு சிறப்பான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த காப்பகம் டில்லி அரசின் சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் இரண்டு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சமூகநலத் துறைக்கு அமைச்சரும் நியமிக்கப்படவில்லை. வேறு அமைச்சரிடமும் அந்த துறை பொறுப்பை ஒப்படைக்கவில்லை.
தேசிய பெண்கள் கமிஷன், குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன் ஆகியவையும் இது குறித்து அறிக்கை அளிக்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளன. துணை நிலை கவர்னர் சக்சேனாவும் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.