ADDED : ஆக 28, 2024 03:56 AM
ஹாவேரி கிரஹலட்சுமி திட்டப் பணத்தை சேமித்து வைத்து, மருமகளுக்கு மாமியார் கடை வைத்து கொடுத்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, கிரஹலட்சுமி என்ற பெயரில், பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சில மாதங்களாக, மாத உதவித்தொகை தங்களுக்கு சரியாக வருவதில்லை என, பல பகுதிகளில், பெண்கள் அரசு மீது குறை கூறி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம், 'கிரஹலட்சுமி திட்டத்தால், நாங்கள் பயனடைந்தோம்' என, பெண்கள் கூறி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கதாயி என்ற மூதாட்டி, கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் கிடைத்த பணத்தை சேமித்து, கிராமத்தில் நடந்த ஊர் திருவிழாவில் 200 பேருக்கு உணவு வழங்கி அசத்தினார்.
இந்நிலையில், கிரஹலட்சுமி பணத்தை பயன்படுத்தி, மருமகளுக்கு மாமியார் கடை வைத்து கொடுத்துள்ளார். ஹாவேரி ஷிகாவி அருகே நிரலகி கிராமத்தைச் சேர்ந்தவர் திராக் ஷாயினி, 60.
இவர் கிரஹலட்சுமி திட்டத்தில், கடந்த பத்து மாதங்களாகக் கிடைத்த 20,000 ரூபாயை சேமித்து வைத்து, தனது மருமகள் குமாரிக்கு வீட்டின் அருகே பேன்சி கடை வைத்து கொடுத்துள்ளார். கிரஹலட்சுமி திட்டத்தையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.
கிரஹலட்சுமி திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது, இந்த திட்டத்தின் மூலம் மாமியார், மருமகளுக்கு சண்டை வரும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலடி கிடைத்துள்ளது.