ஜி.எஸ்.டி., கைது விபரங்கள் சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஜி.எஸ்.டி., கைது விபரங்கள் சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : மே 04, 2024 12:59 AM
புதுடில்லி, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், வரி செலுத்தாதவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள நோட்டீஸ் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணப்பரிமாற்றம்
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், சுங்க சட்டம் மற்றும் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டங்களுக்கு எதிராக, 281 மனுக்கள் உச்ச நீதமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ், பீலா திரிவேதி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் சில அதிகாரிகள் தங்களுக்கான அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், இது தனிநபர்களின் சுதந்திரத்தை பறிப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிட்டார்.
நடவடிக்கை
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த மூன்று ஆண்டுகளில், 1 கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரையிலான வரியை செலுத்தாத நபர்களுக்கு, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் மற்றும் கைது நடவடிக்கை விபரங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
விதியில் தெளிவின்மை இருப்பதைக் கண்டால், அதைச் சரிசெய்வோம். எல்லா வழக்குகளிலும் கைது நடவடிக்கை கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.