மஹாராஷ்டிராவில் பலத்த மழை போக்குவரத்து கடும் பாதிப்பு
மஹாராஷ்டிராவில் பலத்த மழை போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : ஜூன் 09, 2024 11:50 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் துவங்கி விடிய, விடிய கனமழை பெய்தது. மழை வெள்ளத்தால் சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நான்கு மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் துவங்கி நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த மக்கள், வெப்பம் தணிந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மும்பை அருகேயுள்ள பால்கர் அருகே மல்ஜிபடா பகுதியில் தண்ணீர் குழாய் பராமரிப்பு நடந்த பகுதியில் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நேற்று வாகன போக்குவரத்து பாதித்தது. சாலையின் இரு பகுதியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
புனே, தானே, நாசிக், அகமத்நகர், சதாரா மற்றும் ஜல்காவ் பகுதியிலும் விடிய விடிய கனமழை பெய்தது.
தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. தானே நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜூன் 11ல் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இரண்டு நாட்கள் முன்னதாக நேற்று தென்மேற்கு பருவமழை பெய்யத்துவங்கியது.