ADDED : ஆக 29, 2024 02:55 AM
பெங்களூரு, : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கர்நாடகாவில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அரபிக்கடல் சீற்றம் அடைந்துள்ளது. இதன் நேரடி தாக்கம் கர்நாடகாவில் ஏற்படாது என்றாலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நாளை முதல், மழை அதிகரிக்கும் அறிகுறி தென்படுகிறது. மேக மூட்டமான வானிலை இருக்கும். அவ்வப்போது பலமான காற்று வீசும்.
இது தவிர, குஜராத் கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் விளைவாக, கர்நாடாவில் மழையின் அளவு அதிகரிக்கும்.
கடலோரம், மலைப்பகுதிகளில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சாதாரண மழையை எதிர்பார்க்கலாம். கன மழை பெய்யும் மாவட்டங்களில் ஆரெஞ்ச் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.