இறுகும் பிடி! பெண் வாக்குமூலத்தின் படி பிரஜ்வல் மீது மேலும் ஒரு வழக்கு
இறுகும் பிடி! பெண் வாக்குமூலத்தின் படி பிரஜ்வல் மீது மேலும் ஒரு வழக்கு
ADDED : மே 10, 2024 11:02 PM

பெங்களூரு : ரேவண்ணாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, எம்.பி., பிரஜ்வல் மீது மேலும் ஒரு பலாத்கார வழக்கு பதிவாகி உள்ளது. இதனால், அவர் மீதான சட்டத்தின் பிடி இறுகுகிறது. பாலியல் தொல்லை அளித்ததாக, பிரஜ்வல் மீது இரண்டு பெண் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். துணை முதல்வர் சிவகுமார் மீது குற்றம்சாட்டிய, பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடா மீதும், பாலியல் தொல்லை வழக்கு பதிவாகி உள்ளது.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும், வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது பற்றி, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. பிரஜ்வல் இப்போது ஜெர்மனியில் உள்ளார்.
இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த, ம.ஜ.த., பெண் பிரமுகர் ஒருவர், பிரஜ்வல் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், வீடியோ எடுத்து கொண்டு மிரட்டுவதாகவும், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, இ - மெயிலில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி, பிரஜ்வல் மீது பலாத்கார வழக்கு பதிவானது.
விசாரணைக்கு ஆஜராக மூன்று முறை சம்மன் அனுப்பியும், பிரஜ்வல் வரவில்லை. இதனால் அவரை கைது செய்ய, இன்டர்போல் உதவியை, சிறப்பு புலனாய்வு குழு நாடியது. பிரஜ்வல் இருப்பிடம் பற்றி அறிய 196 நாடுகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரஜ்வல் மீது, இரண்டாவது கற்பழிப்பு வழக்கு பதிவாகி இருக்கிறது.
ரகசிய வாக்குமூலம்
அதாவது வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, பிரஜ்வல் தந்தை ரேவண்ணா மீது, மைசூரு கே.ஆர்.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ரேவண்ணா, அவரது உறவினர் சதீஷ் பாபு, ரேவண்ணாவின் மனைவி பவானியின் உறவினரான, கே.ஆர்.நகரின் சஞ்சய், 40, மைசூரின் கீர்த்தி ஒசூர், 38, கே.ஆர்.நகரின் வக்கீல் திம்மப்பா, 40, ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணை, கே.ஆர்.நகர் அருகே பண்ணை வீட்டில், சிறப்பு புலனாய்வு குழு மீட்டு இருந்தது. முதலில் ரேவண்ணா தன்னை கடத்தவில்லை என்று பெண் கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி முன், ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், ஹாசன் சென்னராயப்பட்டணா அருகே கன்னிகடா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து, பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து நேற்று முன்தினமே அந்த பெண்ணை, பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று, சோதனை நடத்தி உள்ளனர்.
அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின்படி பிரஜ்வல் மீது பலாத்காரம் உட்பட ஆறு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில், நான்கு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரஜ்வல் மீதான சட்டத்தின் பிடி இறுகி உள்ளது.
போனில் மிரட்டல்
இந்நிலையில் பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களில், சில அரசு அதிகாரிகளும் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. வீடியோக்களில் இருந்த பெண் அதிகாரிகள் சிலர், விடுப்பில் சென்றனர். பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகளை அடையாளம் கண்ட, சிறப்பு புலனாய்வு குழு அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றது. ஆனால் எங்களை விட்டுவிடுங்கள் என்று, பெண் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு பெண் அதிகாரிகள், பிரஜ்வல் மீது புகார் அளித்து உள்ளனர். அதில், 'பணியிட மாற்றம் தொடர்பாக, எம்.பி., பிரஜ்வலை சந்திக்க சென்றோம். எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மொபைல் போனில் வீடியோ எடுத்தார். பின்னர் வாட்ஸாப் காலில் பேசும்படி, ஆடைகளை அவிழ்க்கும்படி மிரட்டினார். அப்படி செய்யவில்லை என்றால், வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டினார்' என்று கூறி உள்ளனர்.
ஏற்கனவே பிரஜ்வல் மீது பாலியல் தொல்லை, பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. ஏற்கனவே பதிவான பாலியல் வழக்கில், இரண்டு அதிகாரிகளின் புகார் தொடர்பான வழக்குகளை சேர்க்கலாமா அல்லது, புதிதாக வழக்கு பதிவு செய்யலாமா என்று, சட்ட ஆலோசகர்களுடன், சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
ஆஜராக சம்மன்
இதற்கிடையில் பிரஜ்வலின் ஆபாச வீடியோ தொடர்பான, பென்டிரைவ் வெளியிட்டதாக, முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் கவுடா, காங்கிரஸ் பிரமுகர் புட்டராஜ், நவீன்கவுடா, சேத்தன் மீது ஹாசன் சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவாகி இருந்தது. கைதில் இருந்து தப்பிக்க, நான்கு பேரும் முன்ஜாமின் கேட்டனர். ஆனால் முன்ஜாமின் தள்ளுபடி ஆனது.
அவர்கள் மீது பதிவான வழக்கு, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இருந்து, சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்குள் கைது பயம் ஏற்பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக கார்த்திக் கவுடாவுக்கு, சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிரஜ்வல் வழக்கு தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார் மீது குற்றச்சாட்டு கூறிய, வக்கீல் தேவராஜ் கவுடாவுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நில பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி, பாலியல் தொல்லை அளித்தார் என்று, தேவராஜ்கவுடா மீது ஹொளேநரசிபுரா போலீசில், ஒரு பெண் புகார் அளித்தார். அதன்படி தேவராஜ்கவுடா மீது வழக்கு பதிவாகி உள்ளது.