ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
ADDED : ஜூன் 16, 2024 11:23 PM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார்.
ஜம்மு - காஷ்மீரின் தோடா, கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்துள்ளது.
தேடுதல் வேட்டை
கடந்த 9ம் தேதி, ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்திய பாதுகாப்புப் படையினர், மறைந்திருந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். வரும் 29ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்க உள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, தலைநகர் டில்லியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஆய்வு நடத்தினார்.
இக்கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள உபேந்திர திவேதி, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., ஆர்.ஆர்.ஸ்வைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடும் நடவடிக்கை
இதில், ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்தும், அங்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை கேட்டறிந்த அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது ஆய்வு நடத்தி உள்ளார்.