'செபி' அமைப்பின் தலைவர் மாதவி ரூ.17 கோடி சம்பளம் பெற்றது எப்படி? அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
'செபி' அமைப்பின் தலைவர் மாதவி ரூ.17 கோடி சம்பளம் பெற்றது எப்படி? அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
ADDED : செப் 02, 2024 11:22 PM

'செபி' எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்து கொண்டே, ஐ.சி.ஐ.சி.ஐ., தனியார் வங்கி நிறுவனத்திடமிருந்தும், மாதவி புரி புச், 17 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது ஏன் என, கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
அதானி குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா நேற்று கூறியதாவது:
செபி அமைப்பின் தலைவர் பதவியில் மாதவி புரி புச் இருந்து கொண்டு, தனியாருக்கு சொந்தமான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்தும் சம்பளம் பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம் என்பதை அவர் விளக்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். ஆனால், இன்னொரு நிறுவனத்திடம் இருந்தும் சம்பளம் பெற்றால், அது எப்படி நியாயம்?
செபி தலைவர் மாதவி புரி புச், அந்த அமைப்பின் முழுநேர உறுப்பினர். ஆனால், இவர் கடந்த 2017 - 2024 கால கட்டத்தில், தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாக 16 கோடியே 80 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுஉள்ளார்.
பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் மிகப்பெரிய அமைப்பான செபி அமைப்பின் உயர்ந்த பதவியில் இருப்பவர், வேறொரு இடத்தில் இருந்து பணம் பெறுவது எந்த வகையிலும் சரி என தெரியவில்லை; இது, செபி அமைப்பின் விதி எண் 54வது பிரிவுக்கு எதிரானது.
பங்குச் சந்தையில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். எனவே, அதன் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. இந்த செபி அமைப்பின் தலைவரை மத்திய அமைச்சரவைக்கான நியமனங்கள் குழு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்துதான் நியமிக்கின்றனர்.
இவர் சம்பளம் பெற்ற இதே காலகட்டத்தில் தான், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மீது நடைபெற்று வந்த பல்வேறு விசாரணைகள் சமரசம் செய்து கொள்ளப்பட்டன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கான பல்வேறு விதிமுறைகளை, செபி அமைப்பின் தலைவர் தளர்த்தியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இவ்வாறு ஒரு பதவியில் இருந்து கொண்டு, இன்னொரு இடத்தில் சம்பளம் பெற்றுள்ளதன் வாயிலாக, தன் பதவியை தவறாக பயன்படுத்தி ஆதாயம் பெற்றுள்ளார்.
எனவே, மாதவி தன் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு முழு விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது டில்லி நிருபர் -.