ADDED : ஏப் 27, 2024 11:17 PM

மைசூரு: ''பொய் சொல்வதை கற்றுக்கொள்ள, எம்.பி., பிரதாப் சிம்ஹாவை சந்திப்பேன்,'' என, மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் கிண்டல் செய்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவை, 20 முதல் 25 நாட்களாக தொகுதியில் காண முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை சந்தித்து உண்மை போன்று பொய் சொல்வது எப்படி என்பதை, கற்க வேண்டும்.
எனக்காக இரவு, பகலாக பணியாற்றிய தொண்டர்களுக்கு, என் நன்றிகள். முற்போக்கு அமைப்புகள், ஆம் ஆத்மி, தலித் சங்கர்ஷ சமிதி உட்பட, எனக்காக பணியாற்றியவர்களுக்கும், நன்றி கூறுகிறேன். 80 முதல் 85 சதவீதம் பெண்கள், எனக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். ஒருவேளை நான் வெற்றி பெற்றால், குடகு மற்றும் மைசூரில் ஒவ்வொரு அலுவலகம் திறப்பேன். 15 நாட்கள் அங்கும், 15 நாட்கள் இங்கும் இருப்பேன்.
எங்கள் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். பிரதாப் சிம்ஹாவை நினைக்காவிட்டால், எனக்கு திருப்தி இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

