ADDED : மே 13, 2024 12:16 AM

வரவுக்கேற்ற
செலவு என்று சொல்லப்படுவது நிதி வாழ்க்கையில் தாரகமாக அமைகிறது. எனினும்,
பல்வேறு காரணங்களால் குடும்ப செலவுகளை வருமானத்திற்குள் கட்டுப்படுத்துவது
சவாலாக அமையலாம். அதிலும், குறிப்பாக ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும்
குடும்பத்தில் இது கூடுதல் சவாலாக அமையலாம்.
இத்தகைய
ஒற்றை வருமான குடும்பங்களில் செலவுகளை கட்டுப்படுத்துவதும்,
எதிர்காலத்திற்கான சேமிப்பை உறுதி செய்து கொள்வதும் கடினம் என்றாலும்,
முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்வது உள்ளிட்ட வழிகளை பின்பற்றுவதன்
மூலம் இதை சாத்தியமாக்கலாம்.
பட்ஜெட்:
எந்த குடும்பமுமாக
இருந்தாலும் தங்களுக்கு என தகுந்த வரவு -- செலவு திட்டத்தை
வகுத்துக்கொள்வது முக்கியம். பட்ஜெட் மூலமே செலவுகளை கண்டறிந்து
வருமானத்தை பிரித்தளிக்க முடியும். அத்தியாவசிய செலவுகளுக்கு
தேவையான தொகையை ஒதுக்கவும், தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்
பட்ஜெட் கைகொடுக்கும்.
செலவு முன்னுரிமை:
பலவிதமான
செலவுகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான செலவுகளை
கண்டறிந்து முன்னுரிமை அளிக்க வேண்டும். வீட்டு செலவு, கல்வி செலவு,
மருத்துவ செலவு போன்றவை தவிர்க்க இயலாதவை. இத்தகைய செலவுகளுக்கு
ஒதுக்கியது போக எஞ்சிய தொகையை மற்ற செலவுகளுக்கு வைத்துக்கொள்ள
வேண்டும்.
சேமிப்பு திட்டம்:
வருமானம்
அதிகமோ, குறைவோ அதற்கேற்ப சேமிப்பும் இருக்க வேண்டும். மாத
வருமானத்தில் குறைந்தது 10 சதவீதம் சேமிப்பாக இருக்க வேண்டும் என
சொல்லப்படுவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். சேமிப்புக்கான
திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். பி.எப்., செல்வ மகள் திட்டம்
போன்றவை இதில் அடங்கும்.
கூடுதல் வருமானம்:
ஒற்றை
வருமானத்தில் செலவுகளை சமாளிப்பது சவாலாக இருக்கும் நிலையில்,
கூடுதல் வருமானம் வருவதற்கான வழிகளை நாடுவது நல்லது. வாய்ப்பு
இருந்தால் பகுதிநேர பணி அல்லது உபரி வேலைகளை செய்து வருமானம்
ஈட்டலாம். தற்போதைய பொருளாதாரத்தில் இதற்கான வாய்ப்புகளும்
அதிகம் உள்ளன.
குடும்ப ஆதரவு:
எல்லாவற்றையும்
விட முக்கியமாக குடும்ப உறுப்பினர்களுடன் நிதி நிலை தொடர்பாக
வெளிப்படையாக உரையாடி, செலவு திட்டத்தில் அவர்களையும்
சேர்த்துக்கொள்ள வேண்டும். நிதி இலக்குகளையும், வரம்புகளையும்
புரிய வைத்தால், பட்ஜெட்டை கடைப்பிடிப்பதில் அவர்களும் உதவ
முடியும்.