கர்நாடகா கூட்டு பலாத்கார சம்பவம்; 3வது குற்றவாளி சிக்கியது எப்படி?
கர்நாடகா கூட்டு பலாத்கார சம்பவம்; 3வது குற்றவாளி சிக்கியது எப்படி?
ADDED : மார் 12, 2025 01:36 AM

கொப்பால்: கர்நாடக மாநிலம், கங்காவதியில் நடந்த கூட்டு பலாத்கார வழக்கில், மூன்றாவது குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டது குறித்து, கொப்பால் எஸ்.பி., ராம் அரசித்தி விளக்கினார்.
இதுகுறித்து, கர்நாடக மாநிலம் கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கங்காவதிக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், ரிசார்ட் பெண் உரிமையாளர் ஆகிய இருவரும் கடந்த 6ம் தேதி, மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், கங்காவதியைச் சேர்ந்த மல்லேஷ், 22, சேத்தன் சாய், 21, ஆகியோரை 7ம் தேதியும், தலைமறைவாக இருந்த சரணபசவா, 27, என்பவரை சமீபத்தில் சென்னையிலும் கைது செய்தோம்.
சம்பவத்துக்கு பின், சரணபசவா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். தன் மொபைல் போனை வீட்டில் வைத்துவிட்டு, ஒரு பையுடன் வெளியேறியுள்ளார். கங்காவதியில் இருந்து ராய்ச்சூர் ரயில் நிலையத்திற்கு பஸ்சில் சென்றுள்ளார்.
ராய்ச்சூரில் யாரோ ஒருவர் மொபைல் போனை வாங்கி, தன் நண்பர் ஒருவருக்கு 'கால்' செய்து, தான் கூறும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். தகவலறிந்த போலீசார், சரணபசவாவின் நண்பரை பிடித்து, 'உடனடியாக பணம் அனுப்பக் கூடாது' என்றனர்.
இதனால், அந்த நபரின் போனுக்கு, வெவ்வேறு மொபைல் நம்பர்களில் இருந்து சரணபசவா அழைப்பு விடுத்தார். மொபைல் போன் டவர்களை வைத்து கண்காணித்தபோது, அவர் சென்னை ரயிலில் பயணம் செய்வது தெரிந்தது.
இதனால், சென்னை செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அவர் வழியில் எங்கும் இறங்காமல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே சென்றது தெரிந்தது.
அங்கு சென்றும், தன் நண்பர்களுக்கு மொபைல் போனில் கால் செய்து பேசினார். இதன் அடிப்படையில் சென்னை கடற்கரையில் சுற்றித் திரிந்த சரணபசவாவை கைது செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.