டில்லி, ஹரியானா, உ.பி., அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் 'நோட்டீஸ்'
டில்லி, ஹரியானா, உ.பி., அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் 'நோட்டீஸ்'
ADDED : ஆக 03, 2024 11:34 PM
புதுடில்லி,:மனநலக் காப்பத்தில் 20 நாட்களில் 14 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டில்லி அரசின் தலைமைச் செயலர் மற்றும் டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
அதேபோல, மழைநீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மற்றும் மின்சாரம் பாய்ந்து இறந்தது குறித்தும் விளக்கம் அளிக்க டில்லி, ஹரியானா மற்றும் உ.பி., அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டில்லி ரோஹினியில் ஆஷா கிரண் என்ற மனநலக் காப்பகத்தை டில்லி அரசு நடத்துகிறது. இங்கு, கடந்த 20 நாட்களில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் ஊட்டச்சத்து குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
தலைநகர் டில்லியில் பற்றி எரியும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளும் அறிக்கைப் போர் நடத்தி வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டில்லி அமைச்சர் அதிஷி நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.
அதேபோல், டில்லி துணை நிலை கவர்னர், தேசிய பெண்கள் கமிஷன் மற்றும் குழைந்தைகள் பாதுகாப்பு உரிமை கமிஷன் ஆகியவையும் அறிக்கை தாக்கல் செய்ய டில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டில்லி அரசின் தலைமைச் செயலர் மற்றும் டில்லி மாநகரப் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று அனுப்பியுள்ள கடிதம்:
குறுகிய நாட்களில் பெரிய எண்ணிக்கையில் மரணம் அடைந்திருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்க டில்லி அரசு நடத்தும் காப்பகத்தில் ஜூலை 15 முதல் ஜூலை 31 வரை 12 பேர் மரணம் அடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆஷா கிரண் காப்பகத்தின் மருத்துவப் பிரிவு அறிக்கைப்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 54 பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது, காப்பகத்தில் நிலவும் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. காப்பகத்தில் இருந்த இன்னும் பலர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த சம்பவம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.