ADDED : மே 01, 2024 08:18 AM

நெலமங்களா : மனைவியை கொன்று, தண்ணீர் தொட்டியில் போட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல் நெலமங்களாவின், கொட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர் சீனிவாஸ், 40. இவரது மனைவி ஜெயலட்சுமி, 36. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
நெலமங்களாவின், தாபஸ்பேட் தொழிற் பகுதியில் சீனிவாஸ் குடும்பத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிலத்தில், தொழிற்சாலை அமைப்பதற்காக அரசு சில ஆண்டுகளுக்கு முன், கையகப்படுத்தியது. சமீபத்தில் தான் நிலத்துக்கு நிவாரணமாக, 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வந்தது.
சீனிவாஸ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கிடைத்த பணத்தை குடித்தே அழித்து விடுவார் என, ஜெயலட்சுமி அஞ்சினார். எனவே பணத்தை ராம்நகரில் உள்ள, தன் தாய் வீட்டுக்கு அனுப்பினார். தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பாதுகாத்து வைக்கும்படி கூறினார்.
பணத்தை தன்னிடம் கொடுக்காமல், தாய் வீட்டுக்கு அனுப்பிய மனைவி மீது சீனிவாஸ் கோபமடைந்து, சண்டை போட்டார். நேற்று முன்தினம் மாலை மனைவியுடன் சண்டை போட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தார். உடலை வீட்டின் தண்ணீர் தொட்டியில் போட்டார்.
வெளியே சென்று விட்டு வுந்த பிள்ளைகள், 'அம்மா எங்கே' என கேட்ட போது, சீனிவாஸ் தனக்கு தெரியாது என, நாடகமாடினார். தண்ணீர் தொட்டியில் நாய் ஒன்று விழுந்துள்ளது. மூடியை திறக்க வேண்டாம் என, பிள்ளைகளிடம் கூறினார்.
மனைவி உடலை புதைக்க, நள்ளிரவு வீட்டின் அருகில் பள்ளம் தோண்டினார். சத்தம் கேட்டு எழுந்த பிள்ளைகள் கேள்வி கேட்ட போது, தென்னங்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டுவதாக கூறினார். தந்தையின் பேச்சும், தாய் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது, தாயின் உடல் மிதப்பது தெரிந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தாபஸ்பேட் போலீசார், சீனிவாசை கைது செய்தனர்.