ADDED : ஆக 18, 2024 11:36 PM
ஹூளிமாவு : மும்பையை சேர்ந்தவர் மகேஷ்குமார், 46. இவர் பெங்களூரின், ஹூளிமாவில் வசித்தார். கிரேன் ஆப்பரேட்டராக பணியாற்றினார். இவருக்கும் கோலாரை சேர்ந்த மீனா, 36, என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தம்பதி தற்போது ஹூளிமாவுவின், தொட்ட கம்மனஹள்ளியில் வசிக்கின்றனர். மகேஷ்குமாருக்கு, மீனா இரண்டாவது மனைவியாவார். சமீப நாட்களாக மீனாவுக்கு, வேறொரு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த கணவர் பலமுறை மனைவியை திட்டி கண்டித்தார்.
மனைவி வீட்டினருக்கும் இந்த விஷயத்தை கூறினார். ஆனால், மீனா தன்னை திருத்திக்கொள்ளவில்லை. கடந்த 16ம் தேதி இதே விஷயமாக தம்பதிக்கு, தகராறு நடந்தது. கோபத்தில் இரும்பு ராடால், மனைவி மண்டையில் ஓங்கி அடித்து கொலை செய்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
வெளியே சென்ற மகன், வீட்டுக்கு வந்த போது தாய் கொலையாகி கிடந்தது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஹூளிமாவு போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து மகேஷ்குமாரை தேடினர்.
இதற்கிடையே தொட்ட கம்மனஹள்ளி அருகில், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில், மரத்தில் துாக்கிட்ட நிலையில், நேற்று முன் தினம் மாலை மகேஷ் குமாரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.