'எடியூரப்பா முதல்வர் ஆனதில் எனது பங்களிப்பும் உள்ளது'
'எடியூரப்பா முதல்வர் ஆனதில் எனது பங்களிப்பும் உள்ளது'
ADDED : ஆக 29, 2024 12:04 AM

கார்வார்: ''எடியூரப்பா முதல்வர் ஆனதில் எனது பங்களிப்பும் உள்ளது,'' பா.ஜ., -- எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் கூறினார்.
உத்தர கன்னடா, எல்லாபூர் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர்.
காங்கிரஸ் - - ம.ஜ.த., கூட்டணி அரசு மீதான அதிருப்தியால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்தார்.
எடியூரப்பா, பசவராஜ் பொம்மை அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் தற்போது பா.ஜ., தலைவர்கள் மீதான அதிருப்தியால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் வர நினைக்கிறார். அடிக்கடி துணை முதல்வர் சிவகுமாரையும் சந்தித்து பேசுகிறார்.
இதனால் கடுப்பான பா.ஜ., தலைவர்கள், 'சிவராம் ஹெப்பார், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் சேரட்டும்' என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து, சிவராம் ஹெப்பார் நேற்று அளித்த பேட்டி:
எனது ஒழுக்கத்தை பா.ஜ.,வில் உள்ள யாராலும் கேள்வி கேட்க முடியாது. கலாசாரம் பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை.
எடியூரப்பா முதல்வர் ஆனதில் எனது பங்களிப்பும் உள்ளது. நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், பா.ஜ., ஆட்சிக்கு வந்து இருக்குமா.
இனியாவது என்னைப் பற்றி தவறாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

