காஷ்மீர் போவதற்கு பயந்தேன் முன்னாள் அமைச்சர் ஒப்புதல்
காஷ்மீர் போவதற்கு பயந்தேன் முன்னாள் அமைச்சர் ஒப்புதல்
ADDED : செப் 11, 2024 12:47 AM

புதுடில்லி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே, ''ஜம்மு - காஷ்மீருக்கு போவதற்கு பயந்தேன்,'' என, கூறியுள்ளார்; இதை பா.ஜ., விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரான சுஷில்குமார் ஷிண்டே, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.
மஹாராஷ்டிரா முதல்வர், பல மாநில கவர்னர் பதவிகளையும் வகித்துஉள்ளார்.
அவரது, 50 ஆண்டு அரசியல் அனுபவங்கள் தொடர்பான புத்தகம் டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சுஷில்குமார் ஷிண்டே பேசியதாவது:
கடந்த, 2012ல் நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டேன். அப்போது, கல்வியாளர் விஜய் தாரிடம் ஆலோசனை கேட்டேன்.
அவர் ஜம்மு - காஷ்மீரில் சுற்றிவர வேண்டாம். லால் சவுக் மற்றும் தால் ஏரி பகுதிகளுக்கு மட்டும் செல்லுங்கள் என்றார். அதன்படியே செய்தேன்.
பயங்கரவாத பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் தைரியமாக வந்துள்ளார் என்று எனக்கு விளம்பரம் கிடைத்தது. ஆனாலும், உள்ளுக்குள் பயத்துடனேயே இருந்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனேவாலா கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின்போது, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் எப்படி இருந்தது என்பதை அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவரே கூறியுள்ளார்.
அங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தன் பாரத ஒற்றுமை யாத்திரையை அங்கு நடத்தினார்.
அந்த அளவுக்கு அங்கு நிலைமை மத்திய பா.ஜ., ஆட்சியில் மேம்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் பயங்கரவாத நாட்களுக்கு ஜம்மு - காஷ்மீரை இட்டுச் செல்ல, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் முயற்சிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.