ஐ.டி., பெண் ஊழியர் பலாத்காரம் கிராம பஞ்., கவுன்சிலர் கைது
ஐ.டி., பெண் ஊழியர் பலாத்காரம் கிராம பஞ்., கவுன்சிலர் கைது
ADDED : ஆக 01, 2024 12:29 AM
பாகல்குன்டே: குடும்பத்தில் உள்ள பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி, ஐ.டி., பெண் ஊழியரை பலாத்காரம் செய்த, கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு பாகல்குன்டேயில் வசிப்பவர் 27 வயது இளம்பெண். திருமணமான இவர் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால், மன வருத்தத்தில் இருந்தார்.
ஹாசன் அரிசிகெரே கரகுண்டா கிராம பஞ்சாயத்து கவுன்சிலரும், மாந்திரீகம் செய்பவருமான தயானந்தா, 39 என்பவர் குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பதாக, பெண்ணிடம் அவரது தோழி கூறினார். இதனால், சில மாதங்களுக்கு முன் தயானந்தாவை, இளம்பெண் சந்தித்து குடும்ப பிரச்னை பற்றி கூறினார்.
அப்போது பெண்ணிடம் எலுமிச்சை பழத்தை கொடுத்து, தலையணைக்கு அடியில் வைத்து துாங்கும்படி கூறினார். அதன்படி பெண்ணும் செய்தார். மேலும் விசேஷ நாட்களில் தயானந்தா நடத்தி வரும் கோவிலுக்கு சென்று, பூஜையும் செய்தார்.
இந்நிலையில், குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக கூறி அப்பெண்ணிடம் 1.20 லட்சம் ரூபாயை தயானந்தா வாங்கினார். கடந்த வாரம் பெங்களூரு வந்த தயானந்தா, பாகல்குன்டேயில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு அவரை சந்திக்க இளம் பெண் சென்றார்.
அப்போது பெண்ணை மிரட்டி, தயானந்தா பலாத்காரம் செய்ததுடன், மொபைல் போனில் வீடியோவும் எடுத்து கொண்டார். அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
இதனால், தயானந்தா மீது பாகல்குன்டே போலீசில் அப்பெண் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தயானந்தாவை கைது செய்தனர்.