பீஹாரில் இருக்கு... தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது: மதுவிலக்கு குறித்து திருமாவளவன் கேள்வி
பீஹாரில் இருக்கு... தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது: மதுவிலக்கு குறித்து திருமாவளவன் கேள்வி
UPDATED : செப் 11, 2024 12:11 PM
ADDED : செப் 11, 2024 11:28 AM

விழுப்புரம்: 'பீஹாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
மதுக்கடைகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார். அதோடு நில்லாமல், மாநாட்டுக்கு வருமாறு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, விழுப்புரத்தில் இன்று (செப்.,11) நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் கட்சி வரம்புகளை கடந்து, ஜனநாயக அடிப்படையில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். வி.சி.க., மது ஒழிப்பு மாநாட்டில் புதிதாக கட்சி துவங்கி உள்ள விஜய்யும் பங்கேற்கலாம். மதவாதக் கட்சி என்பதால் பா.ஜ., பா.ம.க.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்களுடன் ஒருபோதும் இணையமாட்டோம்.
மதுவிலக்கு
கட்சிகள் வரம்புகளை கடந்து அனைவரும் ஒரே குரலில், ஒருமித்த குரலில் மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது எங்களுடைய அறைகூவல். தேர்தலுக்கான அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தி.மு.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் மதுவிலக்கிற்கு ஆதரவு தருகின்றனர்.
சிக்கல் என்ன?
மதுக்கடைகளைக் குறைப்பது தி.மு.க.,வின் வாக்குறுதி; அதை நினைவுபடுத்துகிறோம். மதுக்கடைகளை மூடி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பீஹாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? எல்லாவற்றையும் கூட்டணி, அரசியல் உடன் இணைத்து பார்க்க கூடாது.
தி.மு.க.,விற்கு வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன. மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான். மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். தி.மு.க.,விற்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.