ADDED : ஆக 19, 2024 07:16 AM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காட்டில், குருக்ருபா முதியோர் இல்லத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி முரளி பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கேரளா பிராமண சபாவின், 'ஆனந்த குடிர் டிரஸ்ட்' ஸ்தாபனம் சார்பில், பாலக்காட்டில் 'குருக்ருபா' என்னும் முதியோர் இல்லம் கட்ட திட்டமிடப்பட்டது.
இந்த முதியோர் இல்ல கட்டுமான பணிகளை, 2020ல், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம், 50,001 ரூபாயை வழங்கி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, முதியோர் இல்லத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி முரளி நேற்று முன்தினம் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக நடத்தப்பட்ட விழாவில், கேரள மகாஜன சபா நிர்வாகிகள் மற்றும் நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும், சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில், 5 லட்சம் ரூபாயை முரளி வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் சிதம்பரநாதன், நிர்வாகிகள் வெங்கடேஸ்வர சர்மா, ஆடிட்டர் வாசுதேவன் செய்திருந்தனர்.
தொடர்ந்து, சிருங்கேரி சாரதா பீடத்தின் பாலக்காடு கிளையின் ஸ்ரீ சாரதா கோவிலுக்கும், வேத பாடசாலைக்கும் சென்று, சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி முரளி பார்வையிட்டார். பாட சாலையில், 40க்கும் மேற்பட்ட வித்தியார்த்திகள் வேதம் பயின்று வருகின்றனர்.

