அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு; பரிசோதனைக்கு ஒரே கட்டணம்
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு; பரிசோதனைக்கு ஒரே கட்டணம்
ADDED : ஜூலை 03, 2024 10:24 PM
பெங்களூரு: கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பரிசோதனை செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும், ஒரே கட்டணம் நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மாதத்தில் மட்டும் 1,700 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்கள், தங்களுக்கு டெங்கு உள்ளதா என்று பரிசோதனை செய்ய செல்லும்போது, தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினர்.
இதுகுறித்து, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ''டெங்கு பரிசோதனை செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று கட்டணம் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படும்,'' என்றார்.
இதற்கிடையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகமும், டெங்கு பாதிப்பை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்கள், வளாகங்கள், ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை துாய்மையாக வைக்க வேண்டும் என, மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தினமும் இரவு அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், கொசு ஒழிப்பான் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.