சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் தளபதி உபேந்திர திவேதி
சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் தளபதி உபேந்திர திவேதி
ADDED : ஜூலை 02, 2024 01:37 AM

புதுடில்லி, “நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள, இந்திய ராணுவம் தயாராக உள்ளது,” என புதிய ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
நம் ராணுவத்தின் தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே, ஜூன் 30 உடன் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, ராணுவத்தின் புதிய தளபதியாக, உபேந்திர திவேதி நேற்று முன்தினம் முறைப்படி பொறுப்பேற்றார்.
இந்நிலையில் டில்லியில், ரைசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள சவுத் பிளாக்கில், ராணுவ அணிவகுப்பு மரியாதையை, ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று ஏற்றுக் கொண்டார்.
இதன் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராணுவத்துக்கு தலைமை தாங்குவது மகத்தான பெருமை. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதே என் முன்னுரிமை; இது, நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
ராணுவம் தனித்துவமான செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்கிறது. இவற்றை எதிர்கொள்ள நம் வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவது மிகவும் முக்கியம்.
மேலும், தொழில்நுட்பத்துக்கு ஏற்றபடி ராணுவத்தில் புதுமைகளை புகுத்த வேண்டும். இதன் வாயிலாக போர் முறைகளையும், உத்திகளையும் மேம்படுத்த வேண்டும்.
நம் ராணுவம் முழு திறன் கொண்டது. தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள, ராணுவம் தயாராக உள்ளது. ராணுவத்தில் சுயசார்பை அதிகரிக்க, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை படையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.