ADDED : மே 05, 2024 05:54 AM

ஹாவேரி: ''கர்நாடகாவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எல்லையே இல்லை. அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது,'' என, சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
ஹாவேரில் அவர் அளித்த பேட்டி:
அரசியல் சட்டத்தை மாற்றுவது தொடர்பாக பா.ஜ., பேசுகிறது. இத்தேர்தல் ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும் காப்பாற்றும் தேர்தல். ஏழை, பணக்காரர்களுக்கு இடையே வாழ்க்கைக்கும், உணர்ச்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
எங்கள் வாக்குறுதித் திட்டம் இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக 99 சதவீதம் மக்களை சென்றடைந்து உள்ளன.
நாட்டின் நிர்வாக வரலாற்றில் இது பெரிய சாதனையாகும். இம்முறை ஹாவேரியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.
மத்திய அரசுக்கு 100 ரூபாய் மாநில அரசு வரி செலுத்தினால் மத்திய அரசு, 13 ரூபாய் தான் மானியம் வழங்குகிறது. மத்திய பிரதேசத்துக்கு 279; உத்தர பிரதேசத்துக்கு 333; பீஹாருக்கு 922 ரூபாய் மானியம் வழங்குகிறது.
கர்நாடகாவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எல்லையே இல்லை. அதிக வரி செலுத்தும் இரண்டாவது மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.